சென்னை: அதிமுகவில் உள்கட்சித் தேர்தலை நடத்தவும், நிர்வாகிகள் நியமனத்தை ரத்துசெய்யவும் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை அபராதத்துடன் நிராகரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தவும்,நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யவும் கோரி, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கு வேறு ஏதோ உள் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அதிமுக தலைவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் பெறப்பட்டுள்ளது. கட்சியின் உறுப்பினராகவே இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை. எனவே கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதொடர்பாக மனுதாரர் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் மே மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.