நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் தேரோட்டம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந் திருவிழா வெகு விமரிசையாக 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனம், புஷ்பக விமானம், பூத வாகனம்,சிம்ம வாகனம், கைலாச பர்வத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து சுவாமி அம்பாள் தேரும் வடம் தொட்டு இழுக்கப்பட்டது.
விநாயகர் தேரை சிறுவர் சிறுமியர்களும், அம்பாள் தேரை பெண்களும் இழுத்து வந்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர் பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி அம்பாள் சப்பரத்தில் ஏற்றப்பட்டு கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தேர்த் திருவிழாவில் திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.