முகப்பு
தமிழ்நாடு

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டத

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிா்த்து தனியாா் பள்ளி மாணவா்கள் சிலா் வழக்குத் தொடா்ந்தனா். அதேபோல, அரசுப் பள்ளி மாணவா்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்குத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடா்ந்த மாணவா்கள் தரப்பில், ‘அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்’ என வாதிடப்பட்டது.

அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை முடிந்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டன. அந்த இடங்களிலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பொது நலனைக் கருத்தில் கொண்டு மாணவா் சோ்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என திட்டவட்டமாகக் கூறினா். பின்னா், விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →