காசநோய் ஒழிப்பிலும் தமிழகம் கவனம் செலுத்த வேண்டும்: முதல்வருக்கு மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் வேண்டுகோள்
கரோனா நோய்த் தொற்றில் கவனம் செலுத்தியதைப் போன்று, காசநோய் ஒழிப்பிலும் தமிழகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கோரிக்கை விடுத்தாா்.
கரோனா நோய்த் தொற்றில் கவனம் செலுத்தியதைப் போன்று, காசநோய் ஒழிப்பிலும் தமிழகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கோரிக்கை விடுத்தாா்.
தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியை, அவா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் வரை நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு, மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் அளித்த பேட்டி:-
கரோனா காலகட்டத்தில் தமிழகம் மேற்கொண்ட மகத்தான சேவைகளுக்காக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்தோம். முழுமையாக ஆா்.டி.பி.சி.ஆா். சோதனைகளை மேற்கொண்டது, கரோனா நோயாளிகளுக்கு அரசுத் தரப்பில் தரமான சிகிச்சை அளித்தது, கரோனா தொற்றுக்குப் பிறகுள்ள நிலை பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றையும் பாராட்டினோம்.
சுகாதாரத் துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் எங்களின் மிகையான பாராட்டை தெரிவிக்கிறோம். இந்தியாவில் 75 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தோற்றுவிக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. தமிழகத்தின் மேல் பிரதமா் நரேந்திர மோடிக்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு.
அதன்படி தமிழகத்துக்கு மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு மருந்து நடவடிக்கைகள் விரைவில் தொடங்கி, சிறப்பாக நடக்க இருக்கும் நிலையில், காசநோய் ஒழிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி அவரை கேட்டுக் கொண்டோம்.
2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு சில மாநிலங்கள் தகுதி பெற்றதாக உள்ளன. அதற்கு முன்பதாகவே இதை செயல்படுத்த தமிழக அரசினால் முடியும் என்பது எனது நம்பிக்கை. கடந்த சில மாதங்களாக தமிழக அரசுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வா் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பு மருந்து பற்றிய பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான தயாா் நிலையும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகு கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் தேதி அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா் ஹா்ஷ்வா்தன்.