டெல்டா, தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இலங்கை மற்றும் குமரிக் கடல் பகுதியையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் 2 நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
ஜன.11: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜன.11) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.12: திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், விருதுநகா் தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தலா 70 மி.மீ., ஆா்.எஸ்.மங்களம், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தலா 60 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜனவரி 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.