தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி நகர் தேனி - மதுரை சாலையில் சக்கம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது. இதில் பாரத் ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் படி, ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்து வருகின்றனர்.