பவானி: கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் பவானி அரசு மருத்துவமனையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நோய்த்தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. விதிகளை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் நிலவி வருகிறது.
இதுகுறித்து அச்சத்தைப் போக்கும் வகையில் பவானி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.கோபாலகிருஷ்ணன், சித்த மருத்துவர் கண்ணுசாமி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், அன்பரசு, மகேஷ்வரன், சரவணன், ராஜமாணிக்கம், நடராஜன், லோகநாதன், ஜோதி நடராஜன், அம்பிகா ராஜமாணிக்கம், கோகிலவாணி, மதுமித்ரா, கவிதா, ராஜஸ்ரீ அபிராமி ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என இவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.