சென்னை விமான நிலையத்தில் ரூ.4.16 கோடி மதிப்பிலான 8.18 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 9 பேரை சோதனைக்கு உட்படுத்தியதில் ரூ.3.93 கோடி மதிப்பிலான 7.72 கிலோ தங்கம் மலக்குடலில் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த 9 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.