திருப்பூரில் குடியரசு நாள் விழா: ரூ.6.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூரில் நடைபெற்ற 72-வது குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற 72-வது குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் 222 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டார். மேலும், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 153 காவலர்கள் மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 97 மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
Advertisement
இதையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கு. சரவண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.