கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் கோங்கல் மேடு பகுதியில் பூர்வகுடிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
கோங்கல்மேடு பகுதியில் உள்ள செயின்ட் எலிசபெத் மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பூர்வ குடிகள் தின விழாவிற்கு ஷைன் குளோபல் கல்லூரி தலைவர் இ.ஆரோன் தலைமை தாங்கினார். ஷேர் அறக்கட்டளை தலைவர் மேரீ ஆக்சீலியா வரவேற்றார்.
இந்த விழாவிற்கு ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம் வேணு, பிபிசிஎல் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.உதயகுமார், லீமா பாரத் கேஸ் உரிமையாளர் லீமா முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.அனுரத்னா, லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் பி.வி.இரவிந்திரன், கிளெமண்ட், திரைப்பட இயக்குனர் கோபி நயினார், சமூக ஆர்வலர் கோபி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற பழங்குடியின மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், இந்த விழாவில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம் வேணு பாராட்டப்பட்டதோடு விழாவில் பழங்குடியின மாணவர்களுக்குப் புத்தாடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.