கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா: காரில் அதிமுக கொடி குறித்து டிடிவி தினகரன் பதில்!
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற முறையில் அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற முறையில் அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தெரிவித்து வரும் நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
உடனடியாக இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது, அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது என்றார்.
இந்நிலையில், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து, 'அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதால் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் இருக்கிறது; ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணி தொடரும்.
அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை உள்ளது. சசிகலா தமிழகம் வந்தபின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டம் தொடரும்.
ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டது என்று பதிலளித்தார்.
முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் இருந்த சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.