விழுப்புரம்: பாமக பிரமுகர் கொலை வழக்கில் உறவினர் மகன் கைது
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் முத்தோப்பு கைலாசநாதர் வீதியைச் சேர்ந்தவர் ரவி. பாமக நகர துணை செயலாளரான அவர், வீட்டின் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர்களால் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் ரவியின் அண்ணன் மகனான ஜெயகணேஷ் முன்விரோதம் காரணமாக குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயகணேஷ் விழுப்புரம் நகர காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த 2006-ஆம் ஆண்டு வீட்டுமனை, கோவில் விழா பிரச்னை தொடர்பாகவும் முன்விரோதம் இருந்தது. அப்போது ரவி தரப்பினர் ஜெயகணேசை தாக்கியதால் வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜெயகணேஷ், ரவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.