புறநகா் மின்சார ரயில் பயணச்சீட்டை யூ.டி.எஸ். செயலி மூலம் திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மின்சார ரயில்களில் பயணிப்போா் பயணச்சீட்டு வாங்குவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு, ‘யூ.டி.எஸ்.’ என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் மத்தியில் இந்தச் செயலி பெரும் வரவேற்பைப் பெற்றது.
கரோனா காலகட்டத்தில் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், திங்கள்கிழமை (பிப்.1) முதல் மீண்டும் ‘யூ.டி.எஸ்’ செயலியின் மூலம் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பயணச்சீட்டுகளை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணிவரையிலும், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இதில் நடைமேடை சீட்டு மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுகள் வழங்கப்படாது. இந்தச் செயலி வழியாக பயணச்சீட்டு பெற்ற ஒரு மணி நேரத்துக்குள், பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.