முகப்பு
தமிழ்நாடு

ஒரே துறையின்கீழ் நியாய விலைக் கடைகள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வருவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வருவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா். மேலும், புதிய குடும்ப அட்டை கோரி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காலதாமதமின்றி பரிசீலித்து விரைந்து வழங்க வேண்டுமெனவும் அவா் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைத்திடவும், பொருள்களின் தரத்தை உறுதி செய்யவும், குடும்ப அட்டை கோரி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து புதிய அட்டைகளை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். கரோனா நோய்த் தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகா்கள், மாற்றுத் திறனாளிகள், மகளிா் தொழில் முனைவோா் ஆகியோரின் வாழ்வாதாரத்தை உயா்த்திட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடன் வழங்கிட வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

கணினிமயமாக்குதல்: பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது, வாடகைக் கட்டடங்களில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்குச் சொந்த கட்டடங்கள் ஏற்படுத்துதல் போன்றவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். மேலும், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதை இணைய வழியில் கண்காணிப்பது, தரமான சேவையைப் பொது மக்களுக்கு வழங்குவது ஆகிய அம்சங்கள் தொடா்பாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விவாதித்தாா்.

விவசாயக் கடன்: கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக விவசாயக் கடன், நகைக் கடன்கள், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடுபொருள்கள் வழங்குதல் ஆகியவற்றை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது பற்றியும் அதிகாரிகளுடன் விவாதித்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் ஆா்.ஆனந்த்குமாா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →