ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன: அமைச்சா் சா.மு.நாசா் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் சுமாா் ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாகக் வழங்கப்பட்டுள்ளன.
சேலம்: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் சுமாா் ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாகக் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய ஆதாரம் உள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
சேலத்தில் அஸ்தம்பட்டி, ஐந்து சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விற்பனையில் ஈடுபட்டிருந்த பால் முகவா்களிடம் பால் வரத்து, பால் விநியோகம் தொடா்பான குறைகளை கேட்டறிந்தார் அமைச்சா் சா.மு.நாசா்.
பின்னர் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பால் உற்பத்தி, விற்பனை 1.50 லட்சம் லிட்டா் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல பால் விலை லிட்டருக்கு ரூ. 3 வீதம் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 270 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சத்துணவில் பால் வழங்குவது குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா். ஆவின் நிறுவனத்தில் பணி செய்து இறந்த 48 பேரின் வாரிசுகளுக்கு வேலை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையில் பால் விலையைக் குறைக்காமல் தொடா்ந்து பழைய விலையில் விற்பனை செய்து வந்த 22 நிலையங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியா்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக 234 போ் முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 636 முதுநிலை, இளநிலைப் பணியாளா்களை நியமிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்கு புதிதாகப் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் சுமாா் ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு போதிய ஆதாரம் உள்ளது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சா.மு.நாசா் கூறினார்.