ரேவதி வீரமணியின் பாட்டியிடம் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய அமைச்சர்கள்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தடகள கலப்புப் பிரிவு விளையாட்டு வீராங்கனை ரேவதி வீரமணியின் பாட்டி ஆரம்மாளிடம், அரசின் சிறப்பு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
சென்னை: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தடகள கலப்புப் பிரிவு விளையாட்டு வீராங்கனை ரேவதி வீரமணியின் பாட்டி ஆரம்மாளிடம், அரசின் சிறப்பு ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
சென்னை நேரு விளையாட்டரங்கில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் ரேவதி வீரமணியின் பாட்டி ஆரம்மாளிடம் காசோலையை வழங்கினார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
Advertisement
ஆடவர் 4x400 மீட்டர் ஓட்டத்துக்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியும், கலப்பு 4x400 மீட்டர் ஓட்டத்துக்காக தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 5 போட்டியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.