சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியில் கையெழுத்து இயக்கம்
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எரிபொருள்களின் விலையினை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எரிபொருள்களின் விலையினை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகம் முன்பு கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய அரசு தினசரி உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் அவர் பெட்ரோல் விலை உயர்வினால் தினசரி கூலி வேலைக்குச் செல்லும் கூலித்தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். டீசல் விலை உயர்வினால் லாரி தொழில் மிகவும் நசிவடைந்து வருகின்றது. எனவே பொதுமக்களிடத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வினை நீக்கிட எரிபொருள்களின் விலை உயர்வினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். பின்னர் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களிடம் மத்திய அரசு எரிபொருள்களின் விலையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட பொதுச் செயலர்கள் பி.சுப்பிரமணியன், செங்கோட்டுவேல், முன்னாள் மாநில துணைச் செயலர் நடராஜ், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி, நகரத் தலைவர் காசிலிங்கம், நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் அங்கமுத்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாதன், கார்த்தி, காமராஜ், லோகநாதன், சின்னுசாமி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.