சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 3 நாள்களுக்கு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மருந்து பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.