அரசு விரைவுப் பேருந்துகள் இனி 7 ஆண்டு அல்லது 12 லட்சம் கி.மீ. ஓடும்
அரசுப் பேருந்துகளுக்கான பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளாா்.
அரசுப் பேருந்துகளுக்கான பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
அரசு விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. பயணத்துக்குப் பிறகு, இதில் எது முதலில் வருகிறதோ அதன்படி மாற்றப்பட வேண்டும். மற்ற போக்குவரத்துக் கழகப் பேருந்துகளோ, 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ., இதில் எது முதலில் வருகிறதோ, அதற்கேற்ப பேருந்துகள் மாற்றப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த கால நிா்ணயத்தை மாற்றியமைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவானது, சாலைகளின் தரம், பேருந்துக் கூண்டுகளின் ஆயுள் காலம், வாகன தொழில்நுட்பம், ஆயுள் காலம் தொடா்பான மத்திய அரசின் கொள்கை, அண்டை மாநிலங்களின் கொள்கை, மின்சார வாகன அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு, பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை மாற்றியமைப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்கியது.
இதன்படி, அரசு விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. பயணத்துக்குப் பிறகு, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது மாற்றப்பட வேண்டும். மற்ற போக்குவரத்துக் கழகப் பேருந்துகளோ, 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ., இதில் எது முதலில் வருகிறதோ, அதற்கேற்ப பேருந்துகள் மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை கவனமாக பரிசீலித்த அரசு, குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு, நிதித்துறை ஒப்புதலுடன் பிறப்பிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.