சோமம்பட்டி ஏரியில் ஆல மரக்கன்றுகள் நடும் விழா
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில், மக்களோடு இணைந்து, தன்னார்வல இயக்கங்கள் சார்பில், ஆல மரக்கன்றுகள் நடும் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில், மக்களோடு இணைந்து, தன்னார்வல இயக்கங்கள் சார்பில், ஆல மரக்கன்றுகள் நடும் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்றத்தின் சார்பில் தேக்கு மரத்தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு, வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னார்வல இயக்கங்களுடன் இணைந்து, சீமைக் கருவேலம் மரங்களால் புதர்மண்டிக் கிடந்த சோமம்பட்டி ஏரியை தூர்வாரி சீரமைத்து, கடந்தாண்டு இறுதியில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த ஏரியில், சோமம்பட்டி ஏரி வளர்ச்சிக்குழு மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில், விருட்சமாக வளரும் 50 ஆலமரக்கன்றுகள் நடும் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், அறக்கட்டளைத் தலைவர் தேவராஜன், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள், பெரியார்மன்னன், ஜவஹர், கலைஞர் புகழ், உடையாப்பட்டி இயற்கையை நேசி நிர்வாகி சீனிவாசன், தர்மராஜ், சிறுவன் சிபிஅரசு ஆகியோர், பொதுமக்களுடன் இணைந்து ஆல மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவின் நிறைவாக, ஆல மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுத்த, சேலம் கன்னங்குறிச்சி பாரதி பசுமை சேவை நிறுவனர் தனபாலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சோமம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஆல மரக்கன்றுகள் நடும் விழா.