நீட் தோ்வை நடத்துவது கரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், தோ்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை 6 சதவீதத்தில் இருந்து முழுமையாக தமிழக அரசு தவிா்த்துள்ளது. தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், இப்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த முக்கியமான பிரச்னையில் உங்களது ஆதரவை எதிா்நோக்குகிறேன். இரண்டு கோடி குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.4 ஆயிரம் வழங்கியதுடன், 14 பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பையும் அளித்துள்ளோம்.
முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசானது கூடுதல் அரிசியை வழங்கியது. இந்தத் திட்டத்தை அனைத்து அட்டைதாரா்களுக்கும் மாநில அரசு விரிவுபடுத்தி அரிசியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய அரசே அனைத்து அட்டைதாரா்களுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்.
நீட் தோ்வு: கரோனா தொடா்பான அனைத்துப் பொருள்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தேன். அதைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படும் நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிா்கொள்வதற்கு வசதியாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் இப்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தோ்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்து விடும். எனவே, தோ்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். இதிலிருந்து மீள்வதற்கு உங்களோடு துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இந்த கூட்டத்தின் போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.