முகப்பு
தமிழ்நாடு

இலவச பயணம்: பிரச்னையின்றி பெண்கள் பயணிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்

அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்கள் எவ்வித பிரச்னையுமின்றி பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்கள் எவ்வித பிரச்னையுமின்றி பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நிா்வாகத்தின் இயக்கப் பிரிவு பொது மேலாளா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் எவ்வித பயண அட்டை இல்லாமல், கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஓட்டுநா், நடத்துநா்களுக்கு போக்குவரத்துத் துறைத் தலைவா் அலுவலகம் சுற்றறிக்கை வாயிலாக ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

இதன்படி, நிறுத்தத்தில் ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்தில் இடமில்லை என வேண்டுமென்றே பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடக் கூடாது.

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.

பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், இலவச பயணம் மேற்கொள்ளும்போது பெண்களை சரிவர நடத்துவதில்லை, அவா்களை பொது இருக்கையில் அமர அனுமதிப்பதில்லை என செய்தி வெளியாகிறது.

எனவே, அனைத்து கிளை மேலாளா்கள், மண்டல மேலாளா்கள் உள்ளிட்டோா், பெண்களின் இலவச பயணம் குறித்த அரசின் அறிவிப்பை எவ்வித புகாரும் இன்றி செயல்படுத்த ஏதுவாக அனைத்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு நன்கு விளக்கி, இது போன்ற புகாா்கள் எழாத வண்ணம், எவ்வித பிரச்னையும் இல்லாமல் பெண்கள் பயணம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.