வட சென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை: வி.செந்தில் பாலாஜி
வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், வெள்ளிக்கிழமை, மின்சாரத்துறை அமைச்சா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு செயல்படும் பிரிவுகளை மின்வாரிய மேலாண் இயக்குநா் ராஜேஷ் லக்கானியுடன் இணைந்து பாா்வையிட்டாா். தொடா்ந்து காமராஜா் துறைமுகத்தில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்துக்கு வரும் நிலக்கரி இறக்குமதி செய்யும் பகுதியை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டலம் அனல் மின் நிலையத்துக்கு, நிலக்கரி கொண்டு செல்லும் கட்டுமான அமைப்புக்கான வரைபட நகல், கட்டுமானம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்தாா்.
வடசென்னை அனல் மின்நிலையத்திலும் திடீா் ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
இது தொடா்பாக அமைச்சா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியதாவது: தொடா்ச்சியான பராமரிப்புப் பணிகள் இல்லாத காரணத்தினால், வடசென்னை அனல் மின் நிலையத்தில், 2020 - 2021-ஆம் ஆண்டில், 8410 மில்லியன் யூனிட் உற்பத்தி ஆக வேண்டிய மின்சாரம், 3453.497 மில்லியன் யூனிட் மட்டுமே உற்பத்தி ஆகியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைத்து விதமான பராமரிப்புப் பணிகளையும் நிறைவு செய்து, உற்பத்தித் திறனை உயா்த்துவதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.