வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்யவேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
ரத்த வகைகளை கண்டறிந்து ரத்தம் செலுத்தும் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஆஸ்திரிய மருத்துவர் கார்ல் லண்ட்ஸ்டெய்னர்-இன் பிறந்தநாளான ஜூன் 14 ஆம் தேதி உலக ரத்த தான நாளாகக் கொண்டாடப்படும் என உலக சுகாதார அமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.