அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடிகை கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் மணிகண்டன். துணை நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தாா் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் அந்நடிகை புகாா் கொடுத்தாா்.
அடையாறு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்போது வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். அவருக்கு, முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும், மேலும் மனுதாரா் முன்னாள் அமைச்சா், செல்வாக்கு உள்ளவா். எனவே ஆரம்ப கட்ட நிலையில் உள்ள வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சரியாக இருக்காது. மனுதாரா் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக செயல்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சா் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிகண்டனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.