செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை திருக்கழுக்குன்றம் பகதவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ரூ.4000/- உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகைப் பொருள்களை வழங்கும் விழாவிற்கு வேதகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் குமரன் தலைமை தாங்கி வரவேற்றார்.
முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்குன்றம் தேவதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பி. செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றி திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், பகதவச்சலேஸ்வரர் கோயில், ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் உள்ளிட்ட திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள் 35 பேருக்கும் கோயில் பணியாளர்கள் 20 பேருக்கும் தலா ரூ.4000 ரொக்கமும் 10 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
திருக்கழுக்குன்றம், திமுக செயலாளர் யுவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கை இரா.தமிழரன் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன், மேலாளர் விஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.