கம்பத்தில் ரேஷன் அரிசி தொகுப்பு கேட்டு பெண்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் கம்பத்தில் ரேஷன் அரிசி தொகுப்பு வழங்காததைக் கண்டித்து கம்பம் மெட்டு சாலையில் பெண்கள் சாலை மறியலில் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் ரேஷன் அரிசி தொகுப்பு வழங்காததைக் கண்டித்து கம்பம் மெட்டு சாலையில் பெண்கள் சாலை மறியலில் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்குள்ள நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு வழங்கும் கரோனா தொகுப்பு, மளிகைப் பொருள்கள், நிவாரணத் தொகை ரூ. 2000 மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி ஆகியவை வழங்காமல் தாமதம் செய்யப்பட்டது.
மேலும், பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும் உணவு சமைக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் பலமுறை புகார் எழுந்துள்ளது. ஆனாலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அலட்சியமாக இருந்துள்ளனர்.
Advertisement
இதைக் கண்டித்து திங்கள்கிழமை காலையில் கம்பம் மெட்டு காலனி, தாத்தப்பன்குளம், நாட்டுக்கல் தெரு, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 50க்கும் மேலான பெண்கள் கம்பம், கம்பம் மெட்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுபற்றி வட்ட வழங்கல் அதிகாரியிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டனர்.
விரைவில் தொகுப்பு பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.