சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி 2-ம் தவணை சிறப்பு முகாம்: மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள மேலும் இரண்டு நாள்களுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள மேலும் இரண்டு நாள்களுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களில் 8,880 நபர்கள் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர்.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு நாட்களுக்கு (25 மற்றும் 26) நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.