திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமுடக்கத்தால் வருமானம் இல்லாமல் தவித்து வரும் ஏழைக்குடும்பத்தினருக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும்.
இந்திய மக்கள் அனைவருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கிருப்பூர்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.