கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய மூதாட்டி.
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 86 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் வெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்து சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை நள்ளிரவு நேரத்திலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கண்டு களித்தனர். மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.