விடுதலைப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி: தமிழிசை தொடக்கி வைத்தார்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே, புதுவை அரசு சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் தொடக்கமான சிறப்பு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்று, கடல் பகுதியில் 75 படகுகள் அடங்கிய படகு பேரணியையும், கடற்கரையோரம் 75 மாணவர்கள் பங்கு பெறும் சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 75,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தண்டி யாத்திரை தொடக்க நாளின் 91-வது நினைவு நாள் என்பதால் அதை நினைவுபடுத்தும் விதமாக, மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை, காந்தி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். துணை நிலை ஆளுநரின் ஆலோசகர்கள், அரசுத்துறை அதிகாரிகள், தியாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய விடுதலையின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா 15.8.2022-ல் நடக்க உள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக 75 வாரங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.