அதிமுக, திமுகவிற்கு வாக்களித்தது போதும்; தமிழகத்தில் வரலாற்று புரட்சி ஏற்படுத்துங்கள்: சீமான் பரபரப்பு பேச்சு
தமிழையும், தமிழ் மக்களையும் நேசிக்கிறோம். தமிழகத்தில் எழுச்சி ஏற்படுத்த தனித்து போட்டியிடுகிறோம்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவு திரட்ட, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சனிக்கிழமை காலை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக மக்களை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் நிற்கிறோம். எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. தமிழையும், தமிழ் மக்களையும் நேசிக்கிறோம். தமிழகத்தில் எழுச்சி ஏற்படுத்த தனித்து போட்டியிடுகிறோம்.
அதிமுக,திமுக கட்சிகள் வெற்றி பெறுவது என்பது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் இது வரலாற்று புரட்சியாகும்.
தமிழகத்தையும், தமிழ் மொழியையும் மீட்கவும், எழுச்சி ஏற்படுத்தவும், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள். நாம் தமிழர் கட்சியின் சின்னம் கரும்புடன் கூடிய விவசாயி சின்னம். கரும்பை பிழிந்தாலும் அதன் சாறு எப்படி நமக்கு ருசியை கொடுக்கிறதோ அதுபோல, நாங்களும் எங்களை வருத்திக் கொண்டும் உங்களுக்காக உழைப்போம். பாடுபடுவோம். அதற்காகத்தான் கரும்புடன் கூடிய விவசாயி சின்னத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.
ஏற்காடு தனித் தொகுதியில் எளியவரான ஜோதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
நிறைவாக, நாம் தமிழர் கட்சி கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் ஆண் குழந்தைக்கு, இனியன் பிரபாகரன் என பெயர் சூட்டினார். இக்குழந்தைக்கு ரூ.500 பரிசளித்தார். தான் பெயர் சூட்டும் குழந்தைக்கு ,ரூ.500 பரிசளிப்பது தனது மரபாக தொடர்ந்து வருவதாக சீமான் குறிப்பிட்டார். இதற்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர்.