வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை சிவநாதபுரம் புதுக்காட்டைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் லிப்சன் (36). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். காய்கறி வாங்குவதற்காக ஆம்னி வேனில் திருப்பூர் காய்கறிச் சந்தைக்குச் சென்றுள்ளார். வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை இரட்டைக்கிணறு அருகே அங்குள்ள ரங்கா ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு கம்பளியம்பட்டி காளிபாளையத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்புறம் ஆம்னி வேன் மோதியது. இதில் ஆம்னி வேன் ஓட்டுநர் அருகில் அமர்ந்திருந்த லிப்சன் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆம்னி வேன் ஓட்டுநர் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.