ஐஏஎஸ் அதிகாரிக்காக மழை நீர் ஓடையை அடைத்த ஆலங்குளம் தேர்தல் அலுவலர்கள்
ஆலங்குளத்தில் தேர்தல் பார்வையாளருக்காக சுமார் 30 அடி அகல ஓடையை அடைத்த தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
ஆலங்குளத்தில் தேர்தல் பார்வையாளருக்காக சுமார் 30 அடி அகல ஓடையை அடைத்த தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலராக ராஜமனோகரனும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டாட்சியர் பட்டமுத்துவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொகுதியின் பொது பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி வீட்பதி மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அலுவலகமாக ஆலங்குளம் – தென்காசி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியை தேர்வு செய்துள்ளனர்.
இந்த பயணியர் விடுதி பிரதான சாலையில் உள்ளதாலும் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்பதாலும் இதனை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான விடுதி முன்பாக சுமார் 30 அடி அகல மழை நீர் ஓடை உள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடையில்தான் மலைப் பகுதி மற்றும் ஆலங்குளத்தின் மேற்குப் பகுதியில் இருந்து வரும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வந்து தொட்டியான்குளத்தை வந்தடையும். தற்போது மழைக் காலம் இல்லை என்பதால் ஓடை வறண்டு காணப்படுகிறது.
இதனை பயன்படுத்தி, சுமார் 10 அடி ஆளம் மற்றும் 30 அடி அகலம் உள்ள இந்த ஓடையை தேர்தல் பார்வையாளர் மற்றும் அதிகாரிகளின் கார் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் போட்டு மூடினர் பேரூராட்சி ஊழியர்கள்.
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது, மூடக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் அதிகாரிகளே இதுபோன்ற சட்ட விரோதமான செயலில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவுத் தலைவர் (காங்கிரஸ்) எஸ்.பி.வி. பால்ராஜ் கூறியது:
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மழை நீர் செல்லும் ஓடையை அதிகாரி சொகுசாக தங்குவதற்கு சுமார் 10 லோடு மண் போட்டு அடைப்பது சட்டத்தை மீறிய செயல். அதிகாரிகளுக்கு நல்லது செய்ய வேண்டிய அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன் மழை ஓடையை அடைப்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். எனவே, ஓடையை அடைக்கப் பயன்படுத்திய மணலை அகற்றுவதுடன் விதி மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இது தொடர்பாக ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்துவிடம் கேட்டபோது, இந்த ஓடையை தற்காலிகமாக அடைத்துள்ளோம். தேர்தல் பொறுப்பாளர் பணி முடிந்து சென்றவுடன் இந்த மண் அகற்றப்படும் என்றார்.