கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை ராஜஅனுக்ஞையும், வியாழக்கிழமை தேவஅனுக்ஞையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கொடியேற்று விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் காலை 6.15 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும்.
9ஆம் திருநாளான மார்ச் 27ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். 28ஆம் தேதி இரவு 8 மணிக்கு தவசுக் காட்சியும், 29ஆம் தேதி இரவு 6.35 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறும்.
கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், சமூக ஆர்வலர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.