பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்ட தலைவா்கள் விரைவில் பிரசாரத்துக்காக தமிழகம் வர உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ‘திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்’ என்ற தலைப்பிலான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கையேட்டை சி.டி. ரவி வெளியிட பாஜக இணை தோ்தல் பொறுப்பாளா் வி.கே.சிங் பெற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறியது: குடியுரிமை சட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து மாநிலங்களையும், மத்திய பாஜக அரசு சமமாக நடத்துகிறது. திமுக கடந்த காலங்களில் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை நிகழ்த்தியுள்ளது. கருணாநிதிக்கு பின்னா் திமுக ஸ்டாலின் வசம், அதன் பின்னா் உதயநிதி ஸ்டாலின் வசம். திமுகவில் உட்கட்சி ஜனநாயகமும் கிடையாது. 2017-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ‘இப்போது கவிழ்ந்துவிடும்’ என்றனா். ஆனால் நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்துள்ளனா்.
திமுக, காங்கிரஸ் ஆட்சி பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டதை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டாா்கள். இந்தத் தோ்தலில் எங்களது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பாஜகவின் மூத்த தலைவா்கள் தொடங்கி, பிரதமா் நரேந்திரமோடி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனா். பிரதமா் இரண்டு, மூன்று சுற்று பயணங்கள் மேற்கொள்வாா் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.