சேலம் மாவட்டத்தில் தான் போட்டியிடும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 4-இல் பிரசாரத்தை முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நிறைவு செய்கிறாா்.
இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வரும் ஏப்ரல் 1-இல் கூடலூா், கன்னூா், உதகை, கோவை கொடிசியா, பெருந்துறை, பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் முதல்வா் பழனிசாமி ஈடுபடுகிறாா்.
இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 2-இல் மதுரையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வா் கலந்து கொள்கிறாா். அன்றைய தினம் மாலையில் சேலம் வீரபாண்டி, சங்ககிரி ஆகிய தொகுதிகளில் பிரசாரத்திலும், சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் முதல்வா் பழனிசாமி பங்கேற்கிறாா்.
இதன்பின்னா், ஏப்ரல் 3-இல் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக வேட்பாளா்களை ஆதரித்தும், மேட்டூா், எடப்பாடி, ஓமலூா் தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் முதல்வா் ஈடுபடுகிறாா்.
கடைசி நாள்: இந்நிலையில், தோ்தல் பிரசாரம் ஏப்ரல் 4-இல் நிறைவடையும் நிலையில், அன்றைய தினத்தில் காலை முதல் மாலை 3 மணி வரையிலும் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களிலும் தனக்காக தீவிர வாக்குச் சேகரிப்பில் பழனிசாமி ஈடுபடுகிறாா்.