சென்னை ஜெ.ஜெ.நகரில் அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த, மக்களுக்கான அம்மா உணவகம் திட்டத்தின் சிறப்பை உணர்ந்து இன்றளவும் அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன.
பெருமழை, பெருவெள்ளம் தொடங்கி, கரோனா பேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப் பிணி நீக்கிய அட்சய பாத்திரம் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
ஜெயலலிதா படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் மு.கஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.