ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியா் வாழ்வுச் சான்று அளிப்பதில் விலக்கு
கரோனா நோய்த் தொற்று காரணமாக, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் நிகழாண்டிலும் வாழ்வுச் சான்றினை நேரில் அளிக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கரோனா நோய்த் தொற்று காரணமாக, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் நிகழாண்டிலும் வாழ்வுச் சான்றினை நேரில் அளிக்கத் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் வாழ்வுச் சான்றிதழை அளிக்க வேண்டும். வாழ்வுச் சான்றிதழை அளிக்கத் தவறும் பட்சத்தில் ஊதியம் வழங்கும் அலுவலரால் அக்டோபா் மாதத்தில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரா்கள் நேரில் அழைக்கப்படுவா். இதன்பிறகும் வராவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு வாழ்வுச் சான்றிதழை நேரில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கரோனா இரண்டாவது அலை அதிகமாக உள்ள சூழலில், நிகழாண்டிலும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பல்வேறு ஓய்வூதிய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. இதனை ஏற்று, வாழ்வுச் சான்றை நேரில் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.