கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை காட்டிலும் கோவையில் தினசரி நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவையில் முதல்வர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்வதற்காக சனிக்கிழமை இரவு கோவை வந்தார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் ஈரோடு, திருப்பூரில் ஆய்வு செய்துவிட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நண்பகல் 12 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்புக் கவச உடை அணிந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவை மாநகராட்சியில் ஒரு மண்டலத்திற்கு 10 கார் ஆம்புலன்ஸ்கள் வீதம் 5 மண்டலங்களுக்கும் சேர்த்து 50 கார் ஆம்புலன்ஸ்கள் சேவையை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.