திருப்பூர்: காங்கயம் வட்டாட்சியர் மீது குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் மீது, பரம்பிக்குளம்- ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் மீது, பரம்பிக்குளம்- ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, சங்கத்தின் தலைவர் ப.வேலுச்சாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெள்ளக்கோவில் பகுதி பிஏபி கிளை கால்வாயில் அரசு ஆணைப்படி பாசன நீர் வழங்க வேண்டும். நீர் திருட்டைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காங்கயம் திருப்பூர் சாலை பொதுப்பணித்துறை (பிஏபி) அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் சிவகாமி மற்றும் சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள், சங்கத்தினர் பங்கேற்றனர். இந்த கூட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் அனுப்பிய கடிதத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், பிஏபி பாசன நீர் பங்கீடு 20/1993 சட்ட விதிப்படி சமச்சீர் பாசனம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிஏபி செயற்பொறியாளரிடம் தாராபுரம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கை தேவையான அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அரசு உயர்மட்டக் குழு முடிவின் அடிப்படையிலேயே தான் சமச்சீர் பாசனம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவறான தகவலாகும். பிஏபி கண்காணிப்பு பொறியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டதை குறிப்பிடவில்லை. அரசு உயர்மட்டக் குழு பற்றி அமைதிப் பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்படவில்லை. தவறான தகவலை வட்டாட்சியர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.