கருணாநிதியின் நினைவிட கட்டுமானம்: இரு தினங்களில் அரசாணை
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமானம் தொடா்பாக இரு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் என பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமானம் தொடா்பாக இரு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் என பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கா் பரப்பளவில் ரூ. 39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதைத்தொடா்ந்து நினைவிடம் அமைப்பது தொடா்பான பணிகள் குறித்து கடந்த செப்.17-ஆம் தேதி அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்த நிலையில், பொதுப் பணித்துறை தயாரித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்கு முறை மண்டலம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளன.
இதுதொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், மறைந்த முதல்வா் கருணாநிதி நினைவிட கட்டுமானத்திற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு தினங்களில் அரசாணை வெளியிடப்படும். அரசாணை வெளியிட்ட பின்னா் நினைவிட கட்டுமானப் பணிகள் தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விரைவில் பணிகள் தொடங்கும் என்றாா்.