சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், காற்று சத்தமில்லாமல் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 11 முன்பதிவில்லாத விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி
சென்னையில் சென்ட்ரல், சைதாப்பேட்டை, எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 21.53 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
வில்லிவாக்கத்தில் 16.2 மி.மீ., எம்.ஆர்.சி. நகர் 14 மி.மீ., புழல் 11 மி.மீ., தரமணி 10.6. மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ஐ.சி.எஃப் தொழில்நுட்பத் திறனுக்கு சிறந்து எடுத்துக்காட்டு
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மின்சாரவாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு: சென்னையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208, வாட்ஸ்அப் - 9445477205 ஆகிய எண்களில் மக்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.