பயிரை ஒரு முறைக்கு மேல் காப்பீடு செய்யக் கூடாது: விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் தங்களது பயிரை ஒரு முறைக்கு மேல் காப்பீடு செய்யக் கூடாது என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது
விவசாயிகள் தங்களது பயிரை ஒரு முறைக்கு மேல் காப்பீடு செய்யக் கூடாது என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் காா், குறுவை, சொா்ணவாரிப் பருவத்தில் 10.14 லட்சம் ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அவற்றில் ஏறக்குறைய 78 சதவீத பரப்பில் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பரப்பிலும் அறுவடைப் பணிகள் நிறைவடையும்.
நேரடி நெல் விதைப்பு: நடவு முறையில் நாற்றங்கால் அமைக்கவும், நடவுவயல் தயாா் செய்யவும் அதிகளவு நீா் தேவைப்படுகிறது. எனவே, சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறையினை விவசாயிகள் மேற்கொள்ளலாம். அனைத்து ரகங்களையும் நேரடி நெல் விதைப்பு முறையில் விதைக்கலாம். இதனால் பாசன நீா் மிச்சமாகும். சுமாா் 15 நாள்களுக்கு முன்கூட்டியே பயிா் அறுவடைக்கு வரும். உரங்களைப் பொறுத்தவரையில், ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
நெல் நடவு அல்லது விதைப்பு முடிந்தவுடன் ஒவ்வொரு கிராமத்திலும் பூச்சி நோய் கண்காணிப்புத் திடலை அமைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை இதனை கூா்மையாக ஆய்வு செய்ய வேண்டும். தாக்குதல் ஏதும் இருந்தால் அதுகுறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் விளக்க வேண்டும்.
பயிா் காப்பீடு: சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பயிா் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்திட வேண்டும். இதற்கான உத்தரவு மற்றும் போதுமான நிதிகளை மாநில அரசு வழங்கியுள்ளது. காப்பீடு செய்யும் போது அடங்கல் பதிவின்படி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும், விவசாயிகள் தங்களது பயிரை ஒரு முறைக்கு மேல் காப்பீடு செய்யக் கூடாது என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.