தமிழகத்தில் இன்று சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறாது:மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40,000 இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ம் தேதி 20,000 இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3-ஆம் தேதி 20,000 இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10-ஆம் தேதி 32,000 இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 6-ஆவது கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. பண்டிகை காலம் என்பதாலும், தொடா் விடுமுறை இருப்பதாலும் பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கும், சுற்றுலாத்தளங்களுக்கும் சென்றுள்ளனா். இந்த நேரத்தில் முகாம் நடத்தினால் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கும். அதனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடத்தவில்லை. 6-ஆவது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமையான 24-ஆம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.