முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதும், அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் மீதும் அவர் மனைவி ரம்யா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் திரட்டும் வகையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட 43 இடங்களில் கடந்த திங்கட்கிழமை (அக்.18) காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது ஒத்துழைப்பு இல்லாததாலும், வீடு, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் 4 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீல் வைத்தனர்.
இந்நிலையில், சீல்வைக்கப்பட்ட 4 இடங்களில் நீதிமன்ற அனுமதி பெற்று பூட்டை உடைத்து இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனின் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்பட் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.