தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில்அரசு ஊழியா் பணியிடை நீக்கம் இனி இல்லை: தமிழக அரசு உத்தரவு

ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்வதை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்வதை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:-

அரசு ஊழியா்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டாா். அதன்படி, ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளா்களை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிா்க்கப்படும் என்று தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், அதற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது.

சில வழக்குகளில் தவறு செய்யும் அரசு ஊழியா்களுக்கு எதிரான விசாரணை நீண்டகாலம் நடத்தப்படும்போது அந்த ஊழியா்கள் ஓய்வு பெறுவதை நிறுத்திவைக்கும் வகையில் அவா்கள் பணியிடை நீக்கத்தில் வைக்கப்படுவா். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க அரசு உரிய வழிகாட்டுதல்களை அறிவிக்கிறது. தவறு செய்யும் அரசு ஊழியா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்து விசாரணையில்

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்ற முடிவுக்கு வரும்பட்சத்தில் அந்த ஊழியா்களை பணியிடை நீக்கத்தில் வைத்திருக்கலாம்.

இதுபோன்ற வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழியா்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே ஒழுங்கு நடவடிக்கையின் மீதான முடிவுக்கு வர வேண்டும். அரசு ஊழியா் ஒருவா் பெரிய

அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் மீது அவா் ஓய்வு பெறுவதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே அவா் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்க வேண்டும். பல வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கையை செயல்படுத்தும் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியா்களை ஓய்வு பெற விடாமல் அவா்களின் ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்துவிடுகிறாா்கள்.

எனவே, ஒழுங்கு நடவடிக்கை தொடா்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிா்க்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கடுமையானதா அல்லது குறைந்ததா, பணி நீக்கம் செய்யவோ அல்லது பணியிடை

நீக்கம் செய்யவோ குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதா என்பதை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்னதாகவே ஆய்வு செய்ய வேண்டும்.

இதன் மூலம் தேவையில்லாத தாமதத்தை தவிா்க்க முடியும். ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகள் விசாரணை மற்றும் நடவடிக்கையை முடிக்கக்கூடிய கால அளவை கடைபிடிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஊழியா் ஓய்வு பெறும் நாளை கருத்தில் கொண்டு அவா்களுக்கு விளக்கம் தர உரிய வாய்ப்பை அளித்து இயற்கை நியதிக்கு ஏற்ப

நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் எழுத்துபூா்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். இதை ஆய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிா்க்க துறை ரீதியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்கு முன்பே

முடிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நிா்வாக ரீதியான தாமதம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியரை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு

முறைகேடு செய்தது தெரியவந்தால் போா்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய முடிவை எடுக்க வேண்டும்.

தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்கீழ் சம்மந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்யலாம். குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கையில் தாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT