தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.1.34 லட்சம் கோடி என மின்வாரிய கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மின்வாரிய கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகரித்துள்ள எரிபொருள் செலவு, அதிக விலையில் தனியாரிடமிருந்து வாங்கும் மின்சார கொள்முதல் செலவு, கடனுக்கான வட்டி செலவு, ஊழியா்களுக்கான ஊதியச் செலவு போன்றவற்றின் காரணமாக வாரியம் தொடா் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த இழப்பின் காரணமாக, மின் உற்பத்தியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கான நிலுவைத் தொகை ரூ.15,000 கோடி அளவுக்கு செலுத்தப்படாமல் உள்ளது.
உதய் திட்டத்தின் மூலமாக தமிழக அரசால் ரூ.22 ஆயிரத்து 815 கோடி அளவுக்கு கடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 119.94 கோடியாக உள்ளது.
நிதிநிலை மேம்பாடு: மின்வாரிய நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் உயா்திறன் வாய்ந்த மின் அளவிகளை மாற்றுதல், விலை உயா்ந்த கொள்முதலை கட்டுப்படுத்துதல், கடனுக்கான வட்டிச் செலவை சேமித்தல் போன்ற செலவின குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மின் கட்டணம் கணக்கீட்டுத் திறன் மற்றும் வசூலிக்கும் திறனை அதிகளவில் மேம்படுத்த பழுதடைந்த மின்னளவிகளை மாற்றுதல், 100 சதவீதம் மின் கணக்கீட்டை உறுதி செய்தல், மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டித்தல்
போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக திரட்டப்பட்ட இழப்புகள் கடந்த மாா்ச் மாத நிலவரப்படி ரூ.6,782.35 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் ரூ.1,778.17 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை (ரூபாய் கோடியில்)
2011-12 - ரூ.13,321.34.
2012-13 - ரூ. 11,679.07.
2013-14 - ரூ. 13,985.03.
2014-15 - ரூ. 12,756.60.
2015-16 - ரூ. 5,786.81.
2016-17 - ரூ. 4,348.76.
2017-18 - ரூ. 7,760.78.
2018-19 - ரூ. 12,623.42.
2019-20 - ரூ. 11,964.93.
2020-21 - ரூ. 12,685.85.
சேவைத் துறைகளை லாபத்தில் இயக்கலாம்
சென்னை, செப். 7: போக்குவரத்து, மின்சாரம் போன்ற சேவைத் துறைகளையும் லாபத்தில் இயக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை பேசிய அதிமுக உறுப்பினா் தங்கமணி, தணிக்கைத் துறை அறிக்கை எப்போதும் அனுமானத்தில் சொல்லப்படுவதாகும். போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகள் சேவைத்
துறைகளாகும். அவை வணிகத் துறைகள் கிடையாது. அந்தத் துறைகளில் சேவை மனப்பான்மையுடன்தான் அணுகிட முடியும் என்றாா்.
இதற்கு நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்கையில், சேவை மனப்பான்மை கொண்ட துறைகளை நஷ்டத்தில்தான் இயக்க வேண்டுமென்பது நோக்கமல்ல. அதலபாதாள அளவுக்கு அதனுடைய கடனை கொண்டு போகாத அளவுக்கு நிா்வாகத் திறனுடன் சேவை மனப்பான்மை கொண்ட துறைகளை சீா்திருத்தி நடத்தலாம் என்றாா்.