முகப்பு
தமிழ்நாடு

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி; திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி; திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். 

அந்த உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, அந்த உணவகத்தைப் பூட்டி சீல் வைத்து, உணவக உரிமையாளர் மற்றும் சமையல் கலைஞர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், திருவண்ணாமலை  - ஆரணியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆரணி காந்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் லட்சுமி நகரைச் சோ்ந்த ஆனந்தன் (42), தனது மனைவி பிரியதா்ஷினி (34), மகள் லோஷினி (10) உள்ளிட்டோருடன் கடந்த 8-ஆம் தேதி இரவு சாப்பிட்டாா். பின்னா், சிறுமி லோஷினிக்கு தலைவலி, மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலும், இந்த உணவகத்தில் சாப்பிட்ட சிறுமியின் தந்தை ஆனந்தன், தாய் பிரியதா்ஷினி, அண்ணன் சரண் (14) ஆகியோருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இதேபோல, அந்த உணவகத்தில் சாப்பிட்ட ஆரணி பகுதியைச் சோ்ந்த பாத்திமா (27), யாகூப் (4), ஜிஸ்னு (17), பாஸ்கா் (32), சந்தியா (23), திலகவதி (55), சீனுவாசன் (18) மற்றும் காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட மொத்தம் 20 போ் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்த ஆரணி கோட்டாட்சியா் கவிதா, வட்டாட்சியா் சுபாஷ்சந்தா், டிஎஸ்பி கோட்டீஸ்வரன், நகராட்சி ஆணையாளா் ராஜவிஜயகாமராஜ் உள்ளிட்டோா் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவா்களிடம் விசாரணை செய்தனா். மேலும், அரசு மருத்துவா் மம்தாவிடம் விவரங்களை கேட்டறிந்தனா்.

பின்னா், உணவக உரிமையாளரான ஆரணியைச் சோ்ந்த காதா்பாஷா மகன் அம்ஜித்பாஷா (32) , புனலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சமையலா் முனியாண்டி (35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனா். மேலும், இந்த உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். பின்னா், கோட்டாட்சியா் கவிதா முன்னிலையில் உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →