சீர்காழி: நலிவடைந்துவரும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கும் வகையில் அதனை அரசு பாடதிட்டங்களில் சேர்க்க வேண்டும் என பின்னணி பாடகர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது வாழ்வில் வைத்தீஸ்வரன்கோயில் எப்பொழுதும் ஒரு திருப்புமுனையை தந்துவருகிறது.
இக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு சென்ற பிறகுதான் தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. தனியார் தொலைகாட்சியில் பிரபல நிகழ்ச்சி வாய்ப்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு என திருப்புமுனையாக இருந்து வருகிறது. தற்போது 5 திரைப்படங்களில் நடத்து வருகிறேன்.
கரோனா காலகட்டத்தில் இயல், இசை, நாடக கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நலிவடைந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றி.
நாட்டுப்புற கலைகளான சிலம்பம், கரகம், பறை இசைத்தல், கதைபாட்டு, கவிதைபாட்டு போன்ற கலாச்சார பண்பாடுகளை பாதுகாத்திடும் வகையிலும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வு மேம்படும் வகையிலும் அரசு பள்ளிகளில் அதனை ஒரு பாடதிட்டமாக வகுத்து வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு கற்பிக்கலாம். நாட்டுபுற கலைஞர்களை அரசு பள்ளியில் பணியமர்த்தி வாய்ப்பு தரலாம். கரோனா கால கட்டத்தில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டது.
கரோனா நெறிமுறையால் திருமணங்கள் எளிமையாக நடப்பதால் இசை கச்சேரிகள் குறைந்துவிட்டது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் சிரமத்தை போக்கும் வகையில் கரோனா விழிப்புணர்வு குறித்த அரசு நிகழ்ச்சிகளில் அந்தந்த மாவட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.